பாக். சுட்ட விமானம் சீனாவில் தயாரானது.. பாகிஸ்தான் முகத்திரையை கிழித்த சீன மீடியா
பீஜிங்: இந்திய-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக சொல்லப்பட்ட உளவு விமானம் (ட்ரோன்) சீனாவில் தயாரானது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம், பாகிஸ்தானின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பறந்த ஆளில்லா உளவு விமானத்தை கடந்த 15ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம், இந்தியாவிற்கு சொந்தமானது என்று கூறிய பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் பகுதிகளை படம் பிடிக்க இந்த விமானத்தை பயன்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியது.
இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதருக்கும் அந்நாடு சம்மன் அனுப்பி விளக்கம் கோரியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய இந்திய விமானம் தங்கள் நாட்டை சேர்ந்தது இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துவந்தது.
இந்தியாவின் நிலைப்பாட்டை சீனாவை சேர்ந்த ஒரு முன்னணி மீடியா இன்று உறுதி செய்துவிட்டது. சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, நடத்தும் 'பீப்பிள்ஸ் டெய்லி', பத்திரிகையின் வெப்சைட்டில், பாகிஸ்தான் சுட்டது சீன தயாரிப்பு ட்ரோன் விமானம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஷாங்காயை சேர்ந்த ஆப்சர்வர் வெப்சைட்டை உதாரணம் காண்பித்து அந்த செய்தி வெளியாகியுள்ளது. அதில், "பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது, சீனாவில் தயாரான ட்ரோன். அதிநவீன அம்சங்கள் கொண்ட ட்ரோனில் முன்னணியிலுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு நெருங்கியதையடுத்து இத்தகைய உளவு விமானங்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.