அய்லானுக்கு அழத் தெரியாது, சிரித்த முகமாகவே இருப்பான்.. கதறி அழும் அத்தை
வான்கூவர்: தனது சகோதரர்கள் அப்துல்லா மற்றும் முகம்மது ஆகியோரின் குடும்பங்களை கனடாவுக்கு அழைத்து வர விரும்புவதாக கூறியுள்ளார் கடலில் படகு மூழ்கி உயிரிழந்து போன சிறுவர்கள் அய்லான் மற்றும் காலிப் ஆகியோரின் அத்தை டிமா குர்தி.
உலகையே அதிர வைத்து விட்டது அய்லானின் பரிதாபம மரணம். கடற்கரையில் உயிரிழந்த நிலையில் குப்புறப்படுத்துத் தூங்குவது போன்ற அந்தப் படம் அத்தனை பேரின் இதயத்தையும் அதிர வைத்து விட்டது. அதேபோல கடற்கரையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்ட்டவன் அய்லானின் 5வயது அண்ணன் காலிப்.
இவர்களின் அத்தையான டிமா குர்தி, கனடாவில் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பே அவர் அங்கு குடியேறி விட்டார். இவரது இளைய சகோதரர் அப்துல்லாவின் பிள்ளைகள்தான் அய்லானும், காலிப்பும். அவர்களது மரணம் டிமா குர்தி குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று இந்த சிறார்களின் நினைவாக அவர்களின் படம் பொறித்த பலூன்கள் பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். டிமா குர்தியும் கண்ணீர் மல்க அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் அழுதபடி பேசினார்.
இருவரது குடும்பமும் இங்கு வர வேண்டும்
எனது இரு சகோதரர்களின் குடும்பமும் இங்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அப்துல்லா தனது குடும்பத்தினருடன் சிரியாவில் உள்ள எங்களது சொந்த ஊரான கொபானியை விட்டு வர மாட்டேன் என்கிறார்.
தனித்து விடப்பட்டு விட்டார்
எனது சகோதரர் தனது மனைவி ரெஹனா, 2 பிள்ளைகளை இழந்து தனித்து விடப்பட்டுள்ளார். இது என்னை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவர் கனடா வர விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
ஒரு நாள் வருவார்
நிச்சயம் ஒரு நாள் நான் அவரை இங்கு அழைத்து வருவேன் என்று நம்புகிறேன். அவரால் தனியாக இருக்க முடியாது. தேவையில்லாத பழி உணர்ச்சிதான் மனதில் இருக்கும். அவரை உயிருடன் பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.
துறுதுறுப்பான அய்லான்
எனது தம்பி மகன் அய்லான் மிகவும் சுறுசுறுப்பானவன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். அவனுக்கு அழக் கூடத் தெரியாது. அவன் இதுவரை அழுததே இல்லை.
தாத்தாவுடன் பேசிய காலிப்
படகு மூலம் எனது தம்பி குடும்பத்தினர் கிளம்புவதற்கு முன்பு காலிப், தனது தாத்தாவிடம் போனில் பேசினான். அப்போது, தாத்தா, எனக்குத் தண்ணீரில் போக பயமாக இருக்கிறது. நீங்கள் லாரி கொண்டு வந்து கூட்டிச் செல்கிறீர்களா என்று கேட்டான். அப்போது அதைக் கேட்டு பின்னால் உட்கார்ந்திருந்த அய்லான் சிரித்தது எனக்கு நன்றாக கேட்டது.
ஆறுதல் கூறிய என் தந்தை
காலிப் அப்படிக் கூறியதும் எனது தந்தை, அவனிடம், கவலைப்படாதே, உனது அப்பா பத்திரமாக உன்னை அழைத்து வருவார் என்று ஆறுதல் கூறினார். நான் எனது இரு சகோதரர்களையும் கனடாவுக்கு அழைத்து வரவே விரும்பினேன்.
புகலிட கோரிக்கையை நிராகரித்த கனடா அரசு
முதலில் எனது மூத்த தம்பி முகம்மதுவின் விண்ணப்பத்தை கனடா அரசிடம் சமர்ப்பித்திருந்தோம். ஆனால் அது முழுமையாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து நம்பிக்கை போனதால் அப்துல்லா, படகு மூலம் தப்பிச் செல்ல முடிவெடுத்து விட்டார்.
பணம் அனுப்பி வைத்தது நான்தான்
அப்துல்லாவிடம் சுத்தமாக காசு கிடையாது. படகில் அழைத்து வருபவர்களுக்குக் கொடுக்க என்னிடம்தான் பணம் கேட்டிருந்தார். நானும் 5000 டாலர் அனுப்பி வைத்திருந்தேன். அதற்காக வருந்துகிறேன். அந்தப் பணம்தான் எனது குடும்பத்தின் நிம்மதியைக் கெடுத்து விட்டது. நான் பாவி என்று அழுதபடி கூறினார் குர்தி.