ஓவர் போதை... பைலட்டை மிரட்டி விமானத்தைக் கடத்திய பயணி!
மாஸ்கோ: ரஷ்யாவில் விமானத்தை கடத்த முயன்ற மதுபோதையில் இருந்த பயணி கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவின் சைபிரியா நகரத்தில் இருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் போயிங் 737 ரக விமான ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில், அந்த விமானம் செல்ல வேண்டிய பாதையில் இருந்து விலகிச் சென்றது.
இதனால் விமான போக்குவரத்து அதிகாரிகள் குழப்பமடைந்தனர். விமானத்தில் ஏதோ கோளாறு என சந்தேகித்த அவர்கள், உடனடியாக அந்த விமானத்தை சைபிரியாவிற்கு அருகில் உள்ள கான்டி மான்சிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறக்க உத்தரவிட்டனர்.
சுமார் இரண்டரை மணியளவில் அந்த விமானம் கான்டி மான்சிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் பாதை மாறி சென்றது குறித்து விசாரித்த போது, அந்த விமானத்தில் சென்ற பயணி ஒருவர், விமானத்தைக் கடத்த முயற்சித்தது தெரியவந்தது.
Passengers from #SU1515 now on their way to Moscow aboard #SU1781. SU1515 diverted after an intoxicated passenger attempted to access the flight deck. https://t.co/hDLOHoM3DR pic.twitter.com/fJOgUlMQtc
— Flightradar24 (@flightradar24) January 22, 2019
அதனைத் தொடர்ந்து அந்த பயணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயணி, விமானம் கிளம்பிய சற்று நேரத்தில், பைலட்டிடம் சென்று விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பும்படி மிரட்டியுள்ளார். விமானத்தை கடத்தும் எண்ணத்தில் இதை அவர் செய்திருக்கிறார்.
வேறு வழியில்லாமல் விமானியும் அந்த பயணியின் மிரட்டலுக்கு அடிபணிந்து விமானத்தை வேறு பாதையில் செலுத்தி இருக்கிறார். விமான போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சுதாரித்துக் கொண்டதால், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது.
குடிபோதையில் விமானத்தை கடத்த முயன்ற அந்த பயணி கைதுசெய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட பயணியை போலீசார் அழைத்துச் சென்ற பிறகு, கடத்தல் முயற்சிக்கு ஆளான அந்த விமானம் மற்ற பயணிகளுடன் சிறிது நேரத்தில் மாஸ்கோ கிளம்பிச் சென்றது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.