தற்கொலை முயற்சி... குடித்து விட்டு 29வது மாடிச் சுவற்றின் விளிம்பில் படுத்து தூங்கிய நபர் மீட்பு!
சீனாவில் போதையில் 29வது மாடி சுவற்றின் விளிம்பில் படுத்துத் தூங்கிய நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெய்ஜிங்: சீனாவில் மதுபோதையில் 29வது மாடி சுவற்றின் விளிம்பில் படுத்துத் தூங்கிய நபரை, போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள சியான் போலீசாருக்கு அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், 'அருகில் உள்ள 29 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடி சுவற்றின் விளிம்பில் ஒரு நபர் படுத்துத் தூங்குவதாக’ தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறை வீரர்கள் உதவியுடன் அந்நபரை பத்திரமாக மீட்டனர். போலீசாரின் விசாரணையில் அந்நபர் அப்போது அதிக மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போதையில் எங்கே படுத்திருக்கிறோம் என்பதைத் தெரியாமல் அந்நபர் அங்கு தூங்கினாரா அல்லது தற்கொலை செய்து கொள்வதற்காக அங்கு அவர் சென்றாரா என்பது தெரியவில்லை.
'தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் குடித்து விட்டு, தூக்கத்திலேயே மாடியில் இருந்து விழுந்துவிட வேண்டும் என அந்நபர் நினைத்திருக்கக்கூடும், ஆனால் அவரது குட்டித் தூக்கமே அவரைக் காப்பாற்றி விட்டது’ என இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தூக்கத்தில் சிறிது லேசாக அசைந்திருந்தால்கூட அவர் மாடியில் இருந்து விழுந்திருப்பார். அதிர்ஷ்டவசமாக குடி போதையால் அவர் அசந்து தூங்கி விட்டார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டு விட்டனர்’ என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபகாலமாக சீனாவில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்கும் வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.