எண்ணெய் வளத்தையும் தாண்டி வியாபாரத்தில் முன்னேறும் துபாய்
-வி.களத்தூர் ஷா
வளைகுடா வளம் பெறும் வாய்ப்பு எண்ணெய்க் கிணறுகளால் என்றால் மிகையல்ல. சில நாடுகள் தங்கள் நாட்டின் வளத்தைக் கொண்டும் சில நாடுகள் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டும் முன்னேறி வருகின்றன. வளைகுடாவைப் பொறுத்தவரை
எண்ணெய்க் கிணறுகள் தான் இதன் வளம். இதனைக் கொண்டே வளைகுடாவில் உள்ள அத்தனை நாடுகளும் முன்னேறி வருகின்றன. அந்த முன்னேற்றதில் பலநாட்டு மக்கள் உழைத்து பங்கு கொண்டு பணம் ஈட்டி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீ்ரகம்
வளைகுடாவில் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E) . இந்த அமீகரத்தில் மொத்தம் 7 மாநிலங்கள் உள்ளன. இதன் தலைநகரம் அபுதாபி. துபாய், சார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், புஜைரா, மற்றும் ராசல்கைமா என்பது இதன் மற்ற மாநிலங்கள்.
அபுதாபியின் துணை நகரம் போல துபாய்
இதில் தலைநகரம் அபுதாபியை அடுத்து துணைத் தலைநகரம் போல் இருப்பது துபாய்.
வியக்க வைக்கும் துபாய்
ஐக்கிய அரபு அமிரகம் ஏறக்குறைய எண்ணெய் வளமே பிரதான வளம் என்ற போதிலும் துபாய் மாநிலம் வியாபாரத்திலும் தன்னை ஈடுபடுத்தி, உலக நாடுகளையே வியக்க வைத்திருக்கிறது.
சிங்கப்பூரையே சிந்திக்க வைக்கும் துபாய்
உலக வியாபாரத்தில் வெற்றிநடைபோட்ட சிங்கப்பூரை சிந்திக்க வைத்திருக்கிறது துபாய் என்றால் மிகையல்ல.
துரைமுருகனை பிரமிக்க வைத்த துபாய்
முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் முன்பொருமுறை, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் விருப்பத்தின் பேரில் துபாய் அழைக்கப்பட்டார். துபாய் வந்த துரைமுருகன் அதன் வளர்ச்சியைக் கண்டு பிரமித்ததார்.
இனிமேல் சிங்கப்பூர் போக மாட்டேன்
தான் சுற்றுலாவிற்காக இதுவரை சிங்கப்பூர் சென்று வந்துள்ளதாகவும் இனிமேல் சிங்கப்பூர் செல்வதை நிறுத்திவிட்டு துபாய் வரவிருப்பதாகவும் கூறிய தகவல், சுற்றுலாவாசிகளை துபாய் கவர்ந்து வருவதற்கான சான்று.
பலரையும் ஈர்க்கும் துபாய்
இந்தியர்களை மட்டுமல்ல சிஙகப்பூர், சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐரோப்பியர்களையும் துபாய் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இனி வந்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டவர்கள்...
1990 களில் தமிழகத்தில் உள்ளவர்கள் துபாயிலிருந்த தமது உறவினர்களிடம் விசா எடுக்கும்படி கூறிய போது அவர்கள் பதிலுரைத்ததை இன்றும் பலர் நினைவில் கொண்டு வினா எழுப்புகின்றனர். ஆம் அப்போது துபாயிலிருந்த தமிழர்கள் கூறியது 'துபாய் வளர்ச்சியே முடிந்துவிட்டது இனி நீ வந்து என்ன செய்யப்போகிறாய்?'
வானத்துக்கும் பூமிக்குமான வளர்ச்சி
அப்போதைய துபாய்க்கும் இன்றைய துபாய்க்கும் வானத்திற்கும் பூமிக்குமான வளர்ச்சி. 1990 களுக்குப் பிறகுதான் துபாய் மிகவும் அதிக அளவில் வளர்ச்சியைக் கண்டு பல்வேறு நாட்டினரை ஈர்த்துள்ளது.
வியாபாரத் திருவிழா
துபாயில் 1996லிருந்து வியாபாரத் திருவிழா (Shopping Festival) தொடங்கப் பெற்று வருடம் ஒருமுறை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கூட 2006 டிசம்பர் 20 முதல் 2007 பிப்ரவரி 2 ந்தேதி வரை நடந்தது.
வந்து குவிந்த வெளிநாட்டினர்
இந்தத் திருவிழாவைப் பார்ப்பதற்காகவே பல்வேறு நாட்டினர் வந்தவண்ணம் இருந்தனர். விசா வழங்குவதற்கான நடைமுறை இத்திருவிழாவிற்காக தளர்த்தப்பட்டதாகத் தெரிகிறது.
கணிணி கண்காட்சி
வருடா வருடம் GITEX - (Gulf Information Technology Exhibition ) - எனும் கணிணி கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது. சுமார் 61 நாடுகள் கலந்து கொண்டு தங்கள் கணிணி வளத்தை அறிமுகப்படுத்துகின்றன.
உலக வியாபாரிகளை கவர்ந்திழுக்கும் கணிணி திருவிழா
நவம்பரில் 5 நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியை எதிர்பார்த்து ஓரிரு மாதங்களுக்கு முன்பேயே கணிணி வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் காத்திருக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அந்தளவிற்கு உலக வியாபாரிகளை கவர்ந்திழுக்கிறது.
கட்டடம் கட்டுவதில் சாதனை
துபாயின் தற்போதைய வளர்ச்சி என்பது கட்டிடம் கட்டுவதில்தான். ஐரோப்பியர்களள அதிக அளவில் குடியேறுகின்றனர். அவர்கள் அதிக அளவில் 99 வருட ஒப்பந்த முறையில் குடியிருப்புகளை வாங்கி தங்கிவருவதாகத் தெரிகிறது.
அடுக்குமாடிகளை வாங்கிக் குவிக்கும் இந்தியர்கள்
ஐரோப்பியர்கள் மட்டுமல்ல இந்தியா உள்பட பல்வேறு நாட்டினர் சொந்தமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க முற்பட்டுள்ளனர்.
முக்கியப் பங்கு வகிக்கும் தங்க நகை வியாபாரம்
துபாயின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்க நகை வியாபாரமாகும். சிங்கப்பூரை முந்தும் முயற்சியில் துபாய் வெற்றியடைந்ததாகவே கருதலாம். புதிய நகை பஜார் ((New gold souq, Old gold souk ) என இரண்டு நகைக்கடை வியாபார பஜார்களும் கோல்டு லேண்ட் என்ற நகை வியாபார காம்ப்ளக்ஸும் உள்ளது. உலக சுற்றுலாவாசிகளை இது மிகவும் கவர்ந்திழுக்கிறது.
மீடியா சிட்டி... இன்டர்நெட் சிட்டி
மீடியா சிட்டி என்றும் இன்டெர்நெட் சிட்டி என்றும் புதிய புதிய நகரங்களை உருவாக்கி பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளையும் உலகை தன்னகத்தே கொண்டுவரும் முயற்சிகளையும் துபாய் நிர்வாகம் செய்துவருகிறது. மீடியா சிட்டியில் உலக செய்தி நிறுவனங்கள் பல தமது நிலையங்களை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையிடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது துபாயில் செயல்படுவது யாவரும் அறிந்ததே.வளைகுடாவின் பக்கம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருப்பது துபாயென்றால் அது மிகையல்ல.
எக்ஸ்போ 2020
எக்ஸ்போ 2020 துபாயில் நடக்கவிருப்பது, துபையின் வியாபார உக்திக்குக்கிடைத்த வெற்றி. அமீரக துணை ஜனாதிபதியும் துபை ஆட்சியாளருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் அயராத உழைப்பு இந்த வெற்றிக்குக் காரணம்.
முழு கவனம் செலுத்தினால் முன்னேறலாம்
வியாபாரத்தில் முழுகவனம் செலுத்தினால் முன்னேறிக் காட்டலாம் என்பது தனி நபருக்கான இலக்கு மட்டுமல்ல நாட்டுக்கே கிடைக்கும் இலக்குமாகும். நாடே முன்னேறும்போது தனிநபர் முன்னேற்றத்தில் தடையா வரும்.