துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் விருது பெற்ற தமிழக அறிவியல் அறிஞருக்கு பாராட்டு விழா!!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் விருது பெற்ற தமிழக பொறியாளருக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
துபாய்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் விருது பெற்ற தமிழக பொறியாளர் எம்.ஜே. முஹம்மது இக்பால் துபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அவரது கடந்து வந்த பாதை மற்றும் அவரின் பெருமைகள் குறித்து விளக்கப்பட்டது.
துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் விருது பெற்ற அறிவியல் அறிஞரும், தோஷிபா எலிவேட்டர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான் எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஷிஹாப் தங்கள் விருது வழங்கி எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
அமீரகத்தில் பணிபுரிந்து வரும் தமிழக பிரமுகர் எம்.ஜே. முஹம்மது இக்பால் சிறப்பு மிக்க இத்தகைய விருதை பெற்றதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஈமான் கல்சுரல் சென்டரின் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டர். இந்த நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஏ ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் பூதமங்கலம் முஹைதீன் அப்துல் காதர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கோட்டாறு சாதிக், செயற்குழு உறுப்பினர் வழுதூர் சபீகுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஏ ஹமீது யாசின், அறிவியல் கருத்துக்கள் குறித்து தமிழில் தேடினால் அதில் முதன்மையாக இருப்பது எம். ஜே. முஹம்மது இக்பால் அவர்களின் கட்டுரைகளே ஆகும். இதுபோல் தமிழ் அறிவியல் உலகுக்கு பல பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட எம்.ஜே. முஹம்மது இக்பால் அவர்கள் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பல்வேறு சமுதாய நலப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த பணிகளுக்கு தன்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளும் அளிக்கப்படும் என்றார். பொறியாளர் வழுத்தூர் இக்பால் உழைப்பின் பொறி குறையாதவர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர்,புதுமை விரும்பி, என அவரின் முகவரி நீண்ட நெடியது. துபாய் ஈடிஏ மெல்கோவில் பொறியாளராக சேர்ந்து உழைப்பால் உயர்ந்து அதே நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றியவர்.
அதன் பிறகு தோஷிபாவில் இணைந்து மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார். தினத்தந்தியில் "அறிவியல் அதிசயம்" என்ற தலைப்பில் விஞ்ஞான அதிசயங்களை தொடராக எழுதி அதை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். தமிழக ஆளுநரிடம் விருது வாங்கி இருப்பவர். கல்ப் நியூஸ், கல்ப் டுடே, கலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.