ஆஸி,.யில் நகரத்தையே விழுங்குவது போல வீசிய புழுதிப்புயல்.. சில மணி நேரம் பகலே இரவான தருணம்
Recommended Video
மில்டுரா: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மில்டுரா நகரில், கடுமையான புழுதிப் புயல் வீசியதால் வானம் மிக கருமையாக காட்சியளித்தது.
வடமேற்கு விக்டோரியா பகுதிகளில் மணிக்கு சுமாா் 87 கி.மீ வேகத்தில் புழுதி புயல் வீசியது. இதனால் சுமார் 2 முதல் மூன்று மணி நேரம் வரை வானம் கருமை படர்ந்து காட்சியளித்தது.
புழுதியுடன் புயல் வீசிய காட்சியை பார்க்கும் போது, மில்டுரா நகரையே மிகப்பெரிய புழுதிப்படலம் விழுங்குவது போல இருந்தது என புயலை நேரில் பார்த்தவர்கள் பீதிக்குள்ளாகினர்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புழுதிப்புயல் மோசமானதாக இருந்ததாக மில்டுரா மக்கள் கூறியுள்ளனர். புயல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், மில்டுரா நகரத்தை தூசி நிறைந்த மேகங்கள் சூழ்ந்தது தெளிவாக தெரிந்தது.
சென்னையில் கடும் வெயிலால் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இந்த புழுதி காற்றில் மில்டுரா நகர விமான நிலைய பகுதி இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறியது. இதனால் விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டு, சில மணி நேரம் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
புழுதி புயல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலையில் ஊர்ந்து சென்றன. புழுதிப் புயல் காரணமாக ஏற்பட்ட இருட்டினால் பகலிலும் தெரு விளக்குகள் எரியவிடப்பட்டன.