மாஸ்கோ வந்த நெதர்லாந்து அரசர் மற்றும் ராணியை தக்காளியால் தாக்கிய தொண்டர்கள்
ரஷ்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையே உள்ள வரலாற்று உறவுகளைக் கொண்டாடும் நோக்கிலே நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்ஸாண்டரும், அவரது மனைவி ராணி மேக்சிமாவும் நேற்று மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்டனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத வேளையில், ரஷ்யாவில் எதிர்க்கட்சியாக விளங்கும் தேசிய போல்ஷெவிக் கட்சியின் செயல்தொண்டர்கள் இருவர் அரசர் மற்றும் ராணி மீது தக்காளிகளை வீசித் தாக்கினர்.
தேசிய பொல்ஷெவிக் கட்சி ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ள கட்சியாகும். அக்கட்சியின் தலைவர் எடோர்ட் லிமொனோவ் இன்று இந்த எதிர்ப்பு குறித்த விளக்கத்தினை அளித்துள்ளார். அதில், ‘நெதர்லாந்து நாட்டின் அயல்நாட்டவர்களை வெளியேற்றும் மையம் ஒன்றில் இருந்த போல்ஷெவிக் கட்சியின் உறுப்பினரான அலெக்சாண்டர் டல்மடோவ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் இதுகுறித்து நெதர்லாந்து அரசு தகுந்தமுறையில் விசாரணை நடத்தவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, நெதர்லாந்து நாட்டுக் கொடியுடன் ரஷ்யக் கடற்பகுதியில் வந்த பசுமை இயக்கத்தினரை அந்நாடு கைது செய்ததுவும், மேலும் மற்ற பிரச்சினைகளும் நிலவும் நிலையில் அரச குடும்பத்தினர் மாஸ்கோவில் தாக்கப் பட்ட சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.