நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்
காத்மாண்டூ: நேபாளத்தில் இன்று பகல் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டூவில் இருந்து மேற்கில் 66 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பகல் 1.53 மணியளவில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்களும் உருண்டன.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெருத்த பொருட்சேதமோ உயிர்சேதமோ ஏற்படவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் எற்பட்ட நிலநடுக்கத்தில் 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 22000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.
லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் நேபாள அரசு பேரிழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.