நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
காத்மாண்டு: நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோளில் 4.6-ஆக பதிவாகியுள்ளது. இத்தகவலை நேபாள நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை சுமார் 4.15 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கமானது பக்தாபூர் பகுதியில் அமைந்துள்ள சல்லாஃகரி என்ற இடத்தை மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 4.6 என்று பதிவான இந்த நிலநடுக்கம், காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் உணரப்பட்டது. திடீரென வீடுகள் குலுங்குவதை கண்ட மக்கள், அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி வீடுகளை விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.