பிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.. மீட்பு பணிகள் தீவிரம்
மணிலா: பிலிப்பைன்சின் வடக்கு தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். 60 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கியது. அந்நாட்டின் வடபகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.16 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சில மணி நேரத்துக்குப் பிறகு காலை 7.38 மணிக்கு 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. பஸ்கோ மற்றும் சப்தங் நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். பழமையான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
மேலும், இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததோடு, 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.