ஆஸி. அருகே பபுவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 7.1 ரிக்டரில் 'ஆப்டர்ஷாக்'!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே உள்ள நியூ பிரிட்டன் தீவில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியிருந்தது.
தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து 680 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 48.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சக்திவாய்ந்த ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்தது.
நியூ பிரிட்டன் தீவில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த தீவு நாடு நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி கோகோபோ நகரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படவில்லை.
சுனாமி ஏற்படாவிட்டாலும் நில அதிர்வால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில் தான் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.