இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. 82 பேர் பலி.. நூற்றுக்கு மேற்பட்டோர் கவலைக்கிடம்
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
Recommended Video
லாம்போக்: இந்தோனேஷியாவின் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லோம்போக் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட நாடு இந்தோனேஷியா. இங்கு நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும். இந்நிலையில் லோம்போக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில விநாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆகவும் பதிவாகி உள்ளது.
மரங்கள் முறிந்து விழுந்தன
சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. இதன் காரணமாக, கட்டிடங்கள், வீடுகள் ஆட்டம் கண்டன. நிலநடுக்கத்தின் விளைவாக பல கட்டிடங்கள் குலுங்கியதுடன், நொறுங்கி விழுந்தன. வேரூன்றி கிடந்த மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்தன.
82 பேர் உயிரிழப்பு
சில மரங்கள் வீடுகளின் மீதும் விழுந்தது. வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கி தூள்தூளாகின. நீண்டு உயர்ந்த மின்கம்பிகளே படார் படார் என நொடியில் சாய்ந்தன. இந்த பயங்கரத்தின் விளைவாக வீடுகளிலிருந்த மக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டே வெளியே வந்தனர். ஆனாலும் 82 பேர் கட்டிடங்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.
உயிரிழப்பு கூடும்
மேலும் உயிரிழப்பு கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தவர்களும் பீதியில் ஓடக்கூடிய முடியாமல் வெளியே வர முயற்சித்தனர். ஆனாலும் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். உடனடியாக மீட்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உடனடியாக இந்தோனேசிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சில மணி நேரத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
யாரும் பயப்பட வேண்டாம்
இந்தோனேஷிய அரசு, "யாரும் பயப்படாதீர்கள், எல்லோரும் உடனடியாக மேடான பகுதிக்கு வேகமாக செல்லுங்கள், நிலைமை சீக்கிரமாவே இயல்பாகும், அதுவரை கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என எச்சரிக்கையும், அறிவுரையும் மாறி மாறி பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மக்கள் இன்னும் பீதியிலிருந்து மீளாமல்தான் உள்ளனர். மீட்பு பணியும் விடா முயற்சியாக நடைபெற்று கொண்டு வருகிறது.