அம்மாடியோவ்.. ஹைட்ரஜன் குண்டு சோதனையால் 5.1 ரிக்டர் அளவில் அதிர்ந்த வடகொரியா
வாஷிங்டன்: வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனை காரணமாக, அணு ஆயுத சோதனை மையம் அருகே ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பூமி குலுங்கியுள்ளது.
வடகொரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கில்ஜு என்ற பகுதி. இங்குதான், அணுகுண்டு சோதனை மையம் அமைந்துள்ளது. முன்னதாக, மூன்று முறை வட கொரியா அணு ஆயுதங்களை இங்கு வைத்து சோதனை நடத்தியுள்ளது.
கடைசியாக 2013ம் ஆண்டு பிப்ரவரியில், இங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக நாடுகளுக்கு தெரியாமல் இன்று வடகொரியா பூமிக்கு அடியில் அணு குண்டு சோதனை நடத்தியது. இது அணுகுண்டைவிட மேம்பட்ட ஹைட்ரஜன் குண்டு என கூறப்படுகிறது.
இதனால் இப்பகுதியில் பெரும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வை அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் முதலில் அறிவித்தது. ஆனால், பிறகுதான், அது ஹைட்ரஜன் குண்டு சோதனையால் உணரப்பட்ட செயற்கை நிலநடுக்கம் என்பது உலக நாடுகளுக்கு தெரியவந்தது.
நிலநடுக்கம் உணரப்படும் அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்த சோதனை நிகழ்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.