டோக்கியோவில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்- சுனாமி எச்சரிக்கை இல்லை
டோக்கியோ: டோக்கியோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். இதனால் அந்நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். உலகில் ஏற்படும் 6 ரிக்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 20 சதவீதம் ஜப்பானில் தான் ஏற்படுகின்றன.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளி அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமியும் ஏற்பட்டது. இது தான் ஜப்பானில் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.