இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு - 368 பேர் படுகாயம்
ரோம்: இத்தாலியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 368 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாலி நாட்டின் மத்திய பகுதிகள் தெற்கு பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை, அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 3.36 மணிக்கு மக்கள் உணர்ந்துள்ளனர்.
ரோம் நகரத்தில் சுமார் 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதை உணர முடிந்துள்ளது. முதலில் நில நடுக்கம் 6.4 ரிக்டர் அளவுக்கு கடுமையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இது 6.2 என்ற அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.
அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குட்டிநகரமான அமாட்ரைசில், பாதி ஊர் தரைமட்டமாகிவிட்டதாக அந்நகர மேயர் கூறியுள்ளதில் இருந்து பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும்.
இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 368 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சேதம் அதிகம் என்பதால், உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை அடையாளம் காணுவதற்காக மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு இதே அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியதில், இத்தாலியில் சுமார் 300 பேர் உயிரிழந்தது நினைவு கூறத்தக்கது.