உலகப் பார்வை: மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
மீண்டும் எபோலா
காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மீண்டும் பெரும் அளவில் எபோலா பரவுவதன் அறிகுறியாக இது உள்ளது.
பண்டகாவிலிருந்து 150கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முதல்முறையாக எபோலோ கண்டறியப்பட்டதிலிருந்து, இதுவரை 23 பேர் அதற்கு பலியாகியுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தால் அனுப்பப்பட்ட 4000 டோஸ் அளவிலான சோதனை எபோலா மருந்துகள் அந்நாட்டிற்கு வந்து சேர்ந்தது.
பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யப் போவதாக வட கொரியா தெரிவித்திருந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா வலியுறுத்தினால், பேச்சுவார்த்தையை ரத்து செய்து விடுவதாக வட கொரியா தெரிவித்திருந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
''கூட்டம் நடைபெறுவதாக இருந்தால் அதிபர் தயாராக இருக்கிறார்'' என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
''அப்படி நடக்கவில்லையெனில், தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிகபட்ச அழுத்தம் தரும் பிரசாரத்தை தொடர்வோம்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டில் மலேசிய போலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அவர் தேர்தலில் தோற்ற ஒரு வாரத்துக்கு பிறகு இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
அவரின் வீட்டின் முன் வாகனங்கள் ரோந்து வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது முன்னாள் கூட்டாளி மீதான ஊழல் விசாரணைகளை மீண்டும் தொடங்க போவதாக புதிய பிரதமர் மஹதீர் முகமத் தெரிவித்திருந்தார்.
ஆனால், தான் எந்த குற்றமும் இழைக்கவில்லை என நஜிப் தெரிவித்துள்ளார்.
நஜிபுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆபாச பட நடிகையின் கூற்றை மெய்பிக்கும் டிரம்ப்
தனது வழக்கறிஞருக்கு, 1,00,000 டாலர்களுக்கும் அதிகமாக பணம் வழங்கியதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் அரசு நெறிமுறைகளுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், டிரம்பின் வழக்கறிஞர் மைகல் கோஹெனிற்கு எதற்காக பணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடவில்லை. அது செலுவு கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸுக்கு 130,000 டாலர்களுக்கு மேலாக பணம் வழங்கியதாக டிரம்ப் வழக்கறிஞர் ஒப்பு கொண்டிருந்தார் என்பது குறிப்பிட்த்தக்கது.
தடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் இல்லினோஸில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெறவிருந்த துப்பாக்கிச் சூட்டை தடுத்து நிறுத்தி பல மாணவர்களின் உயிரை போலிஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்க் டல்லஸ் என்ற அந்த போலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்திய 19 வயது சந்தேக நபரை நோக்கிச் சுட்டார்.
அந்த நபர் இதற்குமுன் பள்ளியிலிருந்து நீக்கபட்டவர் ஆவார்.
டிக்ஸ்ன் உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற அந்த சம்பவத்தால் யாருக்கு காயம் ஏற்படவில்லை.
சந்தேக நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அவருக்கு பலத்த காயங்கள் ஏதும் இல்லை.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் நடைபெற்றுள்ளது. சிக்காகோவின் மேற்கு பகுதியில் 160கிமீ தூரத்தில் அந்த பள்ளி அமைந்துள்ளது. வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்கள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சம்பவம் நடைபெற்றது.
பிற செய்திகள்:
- கர்நாடகா : ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு
- கர்நாடக ஆளுநர் ஏன் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைத்திருக்க கூடாது?
- அணு ஆயுதத்தை கைவிடுவதா? - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா
- அரச குடும்ப திருமணம்: மணமகளுக்கு உள்ள ஆடை கட்டுப்பாடுகள் என்னென்ன?