மேற்கு ஆப்பிரிக்காவை நடு நடுங்க வைக்கும் எபோலா: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
மான்ரோவியா: எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 6 ஆயிரத்து 928 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்கியவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 928 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2014ம் ஆண்டில் எபோலாவால் கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் படும் பாடு குறித்த விவரம் வருமாறு,
2013 டிசம்பர்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் கினியாவில் உள்ள 2 வயது குழந்தையை தான் எபோலா முதலில் தாக்கியது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதன் பிறகு தான் வைரஸ் தீயாக பரவியது.
முதலில்
முதன்முதலில் 1976ம் ஆண்டு காங்கோவில் தான் எபோலா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. காங்கோவில் உள்ள யம்புகு கிராமத்தைச் சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் எபோலா தாக்கி முதலில் பலியானவர். காங்கோவில் ஓடும் எபோலா நதியின் பெயரை தான் வைரஸுக்கும் வைத்துள்ளனர். முதன்முதலாக எபோலா பரவியபோது 318 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதில் 88 சதவீதம் பேர் பலியாகினர்.
தற்போது
தற்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து எபோலா வைரஸ் பரவி வருகிறது. வைரஸுக்கு லைபீரியாவில் வேலை பார்த்த இந்தியர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லைபீரியாவில் தான் அதிகமானோர் எபோலா காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
பலி எண்ணிக்கை
எபோலா வைரஸ் தாக்கி லைபீரியாவில் 3 ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7 ஆயிரத்து 797 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சியர்ரா லியோனில் 2 ஆயிரத்து 33 பேர் பலியாகியுள்ளனர், 8 ஆயிரத்து 273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கினியாவில் 2 ஆயிரத்து 394 பேர் பலியாகியுள்ளனர், 1, 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி
லைபீரியா சென்ற 26 வயது இந்தியர் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உயிர் அணுவில் எபோலா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லைபீரியாவில் எபோலா தாக்கி குணமான பிறகே அவர் டெல்லி வந்துள்ளார்.
தெர்மல் ஸ்கேனர்கள்
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு எபோலா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் கூடுதல் தெர்மல் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா
அமெரிக்கா சென்ற லைபீரியர் ஒருவர் எபோலா வைரஸ் தாக்கி பலியானார். அமெரிக்க மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த நர்ஸை எபோலா தாக்கியது.
இசட்மாப்
லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீபின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா எபோலா காய்ச்சலுக்கு தான் தயாரித்த இசட்மாப் என்ற மருந்தை அளித்தது. அந்த மருந்து சோதனை அடிப்படையில் லைபீரியாவைச் சேர்ந்த எபோலா வைரஸ் தாக்கிய 3 டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டது. மருந்து கொடுக்கப்பட்ட மருத்துவர்களில் ஒருவர் பலியானார்.
குணமடைந்தனர்
லைபீரியாவில் பணியாற்றியபோது எபோலா வைரஸ் தாக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்பினர். அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.