11,000த்தைத் தாண்டியது எபோலா நோய் பலி – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
ஜெனிவா: எபோலா வைரஸ் நோய் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு கினியாவில் தொடங்கிய இந்த நோய் லைபீரியா, சியாராலியோன் ஆகிய நாடுகளுக்கும் வேகமாக பரவி மக்களின் உயிரை பறித்து வருகிறது.
இக்கொடிய வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட கினியா, நோய் லைபீரியா மற்றும் சியாராலேபான் ஆகிய நாடுகளில் மட்டும் 11,005 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லைபீரியாவில் தான் எபோலா நோய் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்நாட்டில் மட்டும் 4716 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது புதிதாக யாரும் அந்நாட்டில் எபோலாவால் பாதிக்கப்படாததால் வரும் மே 9 ஆம் தேதி லைபீரியாவில் எபோலா நோய் தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கினியா மற்றும் சியாராலியோன் ஆகிய நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் மொத்தமாக 9 பேர் மட்டுமே எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.