அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி.. இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்குப் பாதிப்பு?
நியூயார்க்: அமெரிக்காவில் ஒபாமா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெரும் குழப்பத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இதனால் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு 10 லட்சம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது இந்தியாவிலும் தாக்கத்தை எந்தெந்த துறைகள் ஏற்படுத்துமோ என அச்சம் எழுந்துள்ளது.
ஒபாமாவின் காப்பீட்டுத் திட்டம்
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்ற ஒபாமாவின் முக்கிய திட்டங்களில் ஒன்று அமெரிக்க மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு என்பதாகும். அமெரிக்காவில் மருத்துவ செலவும் அதிகம், மருத்துவ காப்பீட்டு தொகையும் மிக அதிகம். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவ காப்பீடு இல்லாமல் உள்ளனர். இதனால் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஒபாமா நிறைவேற்ற திட்டமிட்டார். இதற்கு ஒபாமா கேர் என்று பெயரிடப்பட்டது.
எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை
இந்த திட்டத்திற்கு அமெரிக்க மக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெயரை தட்டிச்சென்றுவிடும், இதனால் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனாலேயே பிரதிநிதிகள் சபையில் பட்ஜெட்டை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டனர் குடியரசுக் கட்சியினர்.
17 ஆண்டுக்குப் பின் குழப்பம்
இதனால் அரசு அரசு அத்தியாவசிய தேவையை தவிர்த்து மற்ற துறைகளை மூட முடிவு செய்துள்ளது. தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், வரி தணிக்கை, வீட்டு கடன் போன்ற பல்வேறு துறைகள் மூடப்பட்டன. இதுபோன்ற துறைகளில் வேலை பார்த்து வந்த சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தாக்கம்?
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவின் மூலம் தான் பெருமளவு வருமானம் ஈட்டுகின்றன. அமெரிக்காவில் இந்த முடக்கம் அதிக நாட்களுக்கு நீடித்தால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கும். 15 நாட்களுக்கு மேலாக இந்த முடக்கம் நீடித்தால் புதிய விசா வழங்கும் பணிகள் பாதிக்கப்படும்.
ரூபாய் மதிப்புக்கு சிக்கல்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செப்டம்பர் மாதத்தில் உயர்ந்து வந்தது. ஆனால் இந்த முடக்கம் காரணமாக ரூபாயின் மதிப்பு மீண்டும் சிக்கலை சந்திக்கும்.
புதிய ஏற்றுமதி பாதிப்பு?
அமெரிக்காவுக்கு புதிய ஏற்றுமதிக்கோ, புதிய முதலீடுகளுக்கோ அனுமதி வழங்க தயங்குவார்கள். இது இந்திய அந்நிய செலாவணி சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பங்கு சந்தையில் பாதிப்பு
பங்கு சந்தையில் ஏற்றமும், இறக்கமுமாக ஊசலாட்டம் காணப்படும். நிதி சந்தையும் பாதிக்கும். இந்தியாவின் ரிசர்வ் வங்கி உள்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் பாதிப்பு ஏற்படாதவாறு முயற்சிகளை மேற்கொள்ளும்.