ஈக்வடார் நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை 646 ஆக உயர்வு
க்விட்டோ: ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது.
ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமையன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். போலீசார், தீயணைப்பு படையினர், ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளதாக ஈகுவடார் அரசு அறிவித்துள்ளது. 12,500 பேர் காயம் அடைந்தனர். வீடுகளை இழந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சாலைகள் மிகவும் சேதமடைந்து விட்டதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இடிபாடுகள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மீளாத மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.