புதிய சூயஸ் கால்வாயை வெட்டுகிறது எகிப்து!!
கெய்ரோ: ஐரோப்பா மற்றும் ஆசியா இடையேயான கப்பல் போக்குவரத்தை மேலும் விரைவாக்கும் வகையில் புதிய சூயஸ் கால்வாயை வெட்டுவதற்கு எகிப்து திட்டமிட்டுள்ளது.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்த்து தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றியே நடைபெற்று வந்தது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வெட்டப்பட்டதுதான் சூயஸ் கால்வாய்.
மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டது. மொத்தம் 163 கி.மீ நீளம் கொண்ட இந்த சூயஸ் கால்வாய் 1869ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இக்கால்வாய் மூலம் எகிப்துக்கு ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியால் சுற்றுலா வருவாய் மற்றும் அன்னிய முதலீடு பெருமளவு சரிந்தும் போயுள்ளது.
இந்த நிலையில் வருவாயை அதிகரிக்கவும், வெளிநாடுகளின் புதிய கப்பல்களை சூயாஸ் கால்வாயில் இயக்குவதற்கும் எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது தற்போதைய சூயஸ் கால்வாய் சிறியதாக இருப்பதால் இருவழி கப்பல் போக்குவரத்து என்பது சாத்தியமற்றதாக இருந்து வருகிறது. இதனால் இதற்கு இணையாக மற்றொரு புதிய கால்வாய் வெட்டுவது என எகிப்து முடிவு செய்துள்ளது.
இது குறித்து இஸ்லாமியா நகரில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய சூயஸ் கால்வாய் நிர்வாக தலைவர் மொகப் மமிஷ், மொத்தம் 72 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய சூயஸ் கால்வாய் வெட்டப்படும். இதன் மூலம் தற்போதைய சூயஸ் கால்வாய் அகலமானதாக உருவெடுக்கும் என்றார்.