66 பேருடன் மாயமான எகிப்து ஏர் விமானம் கடலில் விழுந்து விபத்து
பாரீஸ்: பாரீஸில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு 66 பேருடன் கிளம்பிய எகிப்து ஏர் விமானம் ராடாரில் இருந்து மாயமானது. இந்நிலையில் விமானம் மெடிடெரேனியன் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக பிரான்ஸ் அதிபர் ஹாலண்ட் அறிவித்துள்ளார்.
எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்.எஸ். 804 பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 59 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு நேற்று இரவு 11.09 மணிக்கு கிளம்பியது.
விமானம் எகிப்து வான்வெளி பகுதியில் நுழைந்து 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் இரவு 2.45 மணிக்கு ராடாரில் இருந்து மாயமானது. இந்நிலையில் விமானம் மெடிடெரேனியன் கடல் பகுதியில் விழுந்து மூழ்கிவிட்டதாக பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
மெடிடெரேனியன் கடல் பகுதியில் உள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. விமானத்தில் 3 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். ஏர்பஸ் ஏ320-232 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் கடந்த 2003ம் ஆண்டு வாங்கப்பட்டது.
விமானியும் சரி, துணை விமானியும் சரி அனுபவம் வாய்ந்தவர்கள் என்று எகிப்துஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் எகிப்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து கெய்ரோ சென்ற எகிப்துஏர் விமானத்தை பயணி ஒருவர் சைப்ரஸுக்கு கடத்திச் சென்றார். அவர் தனது முன்னாள் மனைவியை பார்க்க விமானத்தை கடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.