சால்வடாரில் கொடுமை.. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வருட சிறை!
Recommended Video
எல் சால்வடார் நாட்டில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு அந்த நாட்டு கோர்ட் 20 வருட சிறைத் தண்டனை விதித்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்தப் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா.. தனது கருவை அவர் கலைக்க முயன்றதால்தான். எல் சால்வடார் நாட்டில் கருக்கலைப்பு குற்றச் செயலாகும். எனவேதான் இந்தப் பெண்ணுக்கு இத்தனை பெரிய தண்டனையைக் கொடுத்துள்ளது அந்த நாட்டு கோர்ட்.
இந்தப் பெண்ணின் பெயர் இமல்டா கோர்டஸ். 18 வயதாகிறது இவருக்கு. இவரை இவரது வளர்ப்புத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். வளர்ப்புத் தண்டனையின் அக்கிரமச் செயலால் கர்ப்பமடைந்தார் இமல்டா. அந்தக் கருவை சுமக்க விரும்பாமல் கருக்கலைப்பு செய்து கொண்டார்.
இதையடுத்து இமல்டாவை போலீஸார் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். அவரது வழக்கை விசாரிக்க கோர்ட், சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்து கொண்டதால் இமல்டாவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
[லண்டனில் அம்பு ஏவி இந்திய வம்சாவளி பெண் கொலை.. வயிற்றிலிருந்த சிசு தப்பிய அதிசயம்]
இமல்டா மட்டுமல்ல எல் சால்வடாரில் கருக்கலைப்பு செய்து கொண்டதற்காக 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பலரும் தாங்களாக கருக்கலைப்பு செய்து கொண்டவர்கள் கிடையாது. சிலருக்கு இயற்கையாகவே கரு கலைந்து போயுள்ளது. இவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அந்த நாடு.
கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று எல் சால்வடார் அரசுக்கு ஐ.நா. சபை ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தற்போது இமல்டாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனையானது, ஐ.நா.வின் கோரிக்கை குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டதையே உணர்த்துவதாக உள்ளது.