யு.எஸ்.: வயதான சீக்கியரை தீவிரவாதி, பின் லேடன் என கூறி கொடூர தாக்குதல்
நியூயார்க்: சிகாகோவில் வயதான சீக்கிய அமெரிக்கரை தீவிரவாதி என்றும், பின் லேடன் என்றும் கூறி ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்தவர் இந்தர்ஜித் சிங் முக்கர். சீக்கிய அமெரிக்கரான அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை. வயதான இந்தர்ஜித் காரில் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வேறு ஒரு காரில் வந்த நபர் இந்தர்ஜித்தின் காரை வழிமறித்துள்ளார். அவரும் காரை நிறுத்தி அந்த நபர் செல்ல வழிவிட்டுள்ளார்.
அந்த நபரோ காரை விட்டு இறங்கி வந்து இந்தர்ஜித்தை பார்த்து தீவிரவாதி, பின் லேடன் என்று கூறி அவரின் முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த இந்தர்ஜித் மயக்கம் அடைந்தார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்தர்ஜித்தை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகத்தில் 6 தையல் போடப்பட்டது. இதற்கிடையே போலீசார் இந்தர்ஜித்தை தாக்கியவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
9/11 தாக்குதல் நினைவு தினம் நாளை அணுசரிக்கப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் சீக்கியர் ஒருவரை தீவிரவாதி என்று கூறி தாக்கிய நபர் அவரை காரில் 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்றார். முன்னதாக 2012ம் ஆண்டில் விஸ்கான்சினில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்திற்கு வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.