வெனிசுலா விவகாரம்.. அமெரிக்கா அனுப்பிய எலியட் அப்ரம்ஸ் எப்படிப்பட்டவர் தெரியுமா?
சென்னை: வெனிசுலா பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவால் நியமிக்கப்பட்டுள்ள எலியட் அப்ரம்ஸ் எப்படிப்பட்டவர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எண்ணை வளம் மிக்க லத்தின் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு யார் காரணம் என்ற விவாதம் நாடெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ, எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லோரையும்விட மிக முக்கியமான மனிதர் ஒருவர் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார். அவர் தான் வெனிசுலா நெருக்கடியை கையாள அமெரிக்காவால் புதிதாக நியமிக்கப்பட்ட எலியட் அப்ரம்ஸ்.
71 வயதான அப்ரம்ஸ், கம்யூனிசத்துக்கு எதிராக வலுவான விமர்சனங்களை முன்வைக்கக் கூடியவர். இவர் தனது சர்ச்சைக்குரிய அரசு பணியின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்.
மனித உரிமைத்துறை அமைச்சர்:
1981ம் ஆண்டு ரொனால்ட் ரேகன் ஆட்சி காலத்தில், அமெரிக்காவின் மனித உரிமைத் துறை அமைச்சராக பணியாற்றியவர் அப்ரம்ஸ். அப்போது, அமெரிக்கா ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட படை ஒன்று, எல் சல்வாடோர் எனும் கிராமத்தில் படுகொலைகள் நடத்தியதை மூடி மறைத்தவர் என்ற குற்றச்சாட்டு அப்ரம்ஸ் மீது உண்டு.
மன்னிப்பு:
அதேபோல், 1980களில் அமெரிக்காவில் நடந்த ரான் - காண்ட்ரா ஊழல் குற்றச்சாட்டிலும் அப்ரம்ஸ் பெயர் அடிப்பட்டது. சமீபத்தில் மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ் தான் அப்ரம்ஸை மன்னித்தார்.
கடைசி அரசுப் பணி:
தற்போது அவர் தனது கடைசி அரசு பணியாக, இப்போது வெனிசுலா நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், அவரது முந்தைய சர்ச்சை சம்பவங்களின் அடிப்படையில் கூறுவதென்றால், ஜனநாயகத்தை நசுக்கி தான் அப்ரம்ஸுக்கு பழக்கம்.
முந்தைய சம்பவங்கள்:
1980களில் பனிப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், ரொனால்ட் ரேகன் ஆட்சியின் போது மத்திய அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் நடமாட்டத்தை அடியோடு நசுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டவர் அப்ரம்ஸ். சோவியத் யூனியன் மற்றும் கியூபா நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரின் போது, கவுதமாலா, எல் சல்வாடோர், நிகரகுவா உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அப்ரம்ஸின் பழக்கம்:
மத்திய கிழக்கு நாடுகள் விவகாரங்களில் தான் அப்ரம்ஸ் அதிகம் பணியாற்றி இருக்கிறார். லத்தின் அமெரிக்க விவகாரங்களில் அவர் அவ்வளவாக ஈடுபட்டதில்லை. ஆனால் அதிகாரத்தையும், குறிப்பாக ராணுவத்தை பயன்படுத்தி, மிகக்கொடூரமான முறையில் பிரச்சினையை முடிக்கும் மனிதர் அப்ரம்ஸ் என்பது அனைவருக்கும் தெரியும்.
மைக் பாம்பியோ:
ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக அப்ரம்ஸ் செயல்பட்டார். இதனால் டிரம்ப் அரசில் முதலில் அவருக்கு நல்ல பெயர் இல்லை. ஆனால் தற்போது டிரம்ப் அரசில் அமைச்சராக இருக்கும் மைக் பாம்பியோ தான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அப்ரம்ஸை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அப்ரம்ஸ் கையில் மீண்டும் தற்போது அதிகாரம் கிடைத்துவிட்டது.
பொருளாதாரத் தடை:
அதை வைத்து வெனிசுலா நாட்டை அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் இருக்கிறது. ஏற்கனவே அதிபர் நிக்கோலசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக, வெனிசுலா மீது பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கத் தொடங்கியுள்ளது. இதில், முதல் நடவடிக்கையாக அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ள அரசின் பெட்ரோலிய நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருளாதாரத் தடை விதித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி:
இந்தப் பொருளதாரத் தடையால் அமெரிக்காவிற்கான எண்ணெய் ஏற்றுமதியும் தடுக்கப்படும். இதனால், அடுத்தாண்டில் வெனிசுலாவுக்கு ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெனிசுலாவுக்கு, இது மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.