25 தமிழர்களை சுட்டுக்கொன்ற நாயுடுவை கைது செய்க.. அமெரிக்க மேயருக்கு பறந்த மெயில்கள்!
செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் கொலை சம்பவத்திற்காக, சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று இ-மெயில் புகாரில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி அம்மாநில போலீசாரால் 25 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின், இர்விங் நகர மேயருக்கு அனாமதேய இ-மெயில் கோரிக்கைகள் சென்று குவிந்துள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள இர்விங் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், இர்விங் நகர மேயர் பேத் வான் டுய்ன்-னுக்கு வந்த சில இ-மெயில்கள் அவரை தூக்கி வாரிப்போட்டன.
இமெயிலை அனுப்பியது 'மனித உரிமைகளுக்காக போராடும் இந்தியர்கள்' என்ற பெயரிலான ஐடியில் செயல்படுவோர்களாகும்.
25 தொழிலாளர்கள்
அந்த இ-மெயிலில், திருமலை அருகேயுள்ள சேசாச்சலம் வனப்பகுதியில் 25 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றதாகவும், இவர்களை செம்மரம் கடத்தியதாக குற்றம்சாட்டி, இப்படி சரமாரியாக சுட்டுக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே தமிழர்கள் என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும்.
இ-மெயில் புகார்
இந்த கொலை சம்பவத்திற்காக, சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய வேண்டும் என்று இ-மெயில் புகாரில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்கள் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் பின்னணி பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
நன்கொடை
அமெரிக்க குடிமக்களிடமிருந்து அதிகப்படியான நன்கொடையை அனுமதியின்றி சந்திரபாபு நாயுடு பெற்றுவருவதாகவும் இ-மெயில்களில் குற்றம்சாட்டப்பட்டன. அமெரிக்க முதலீட்டாளர்கள், ஆந்திராவை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடம், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை அமைக்க நிதி உதவி கோரி சந்திரபாபு நாயுடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
விசாரணை
இ-மெயில் புகார்களை தொடர்ந்து, அவர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு போலீசார் சென்று விசாரித்து பார்த்தபோது, அது அனுமதி பெறப்பட்டு நடைபெறும் நிகழ்ச்சி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.