உலகின் பெரிய துபாய் விமானம் ஏர்பஸ் ஏ380 மான்செஸ்டரில் திடீர் தரையிறக்கம்- பயணிகள் பீதி!
மான்செஸ்டர்: துபாயிலிருந்து இருந்து நியூயார்க் சென்ற எமிரேட்ஸ் விமானம் அவசரமாக மான்செஸ்டரில் தரையிறக்கம் செய்யப்பட்ட சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சொந்தமான இ.கே.201 ஏர்பஸ் ஏ380 என்ற உலகின் பெரிய விமானம் இன்று துபாயில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனே விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது விமானம் லண்டன் அருகே கடற்பகுதியின் மேல் பறந்து கொண்டிருந்தது. உடனே விமானி லண்டன் மான்செஸ்டர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விமானம் தரையிறங்க அனுமதி கேட்டார்.
மான்செஸ்டர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரி அனுமதி கொடுத்ததும், விமானி விமானத்தை அந்த விமான நிலையத்திற்கு திருப்பினார்.
விமானம் சரியாக இந்திய நேரப்புடி இன்று மாலை 6.50 மணிக்கு சரியாக மான்செஸ்டரில் தரையிறங்கியது. உடனே உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அத்துடன் விமானத்திற்கு எரிபொருளும் நிரப்பப்பட்டது. இதனால் அந்த விமானம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் காலதாமதமாக மீண்டும் நியூயார்க் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எமிரேட்ஸ் விமான நிறுவன நிர்வாகத் துணைத் தலைவர் டெல் அல்-ரேதா கூறும்போது ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற மருத்துவ அவசரத்திற்காக 100 விமானங்கள் பாதை மாற்றி அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.
இதற்காக 12 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது'' என்றார். எனினும், இந்த திடீர் சம்பவத்தால் மற்ற பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர்.