எமிரேட்ஸ் விமான 282 பயணிகளையும் பத்திரமாக காப்பாற்றி தன்னுயிரை பறிகொடுத்த துபாய் தீயணைப்பு வீரர்
துபாய்: திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் நேற்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விபத்துக்குள்ளானது.
இதில் பயணித்த பயணிகள், விமான ஊழியர்கள் உட்பட 282 பேரும் வெளியே குதித்து தப்பியோடியதால் உயிர் பிழைத்தனர். இருப்பினும் தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 எண் கொண்ட, போயிங் வகை விமானம் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர்.
சக்கரம் உடைந்தது
துபாய் நேரப்படி நேற்று மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, முன்பக்க சக்கரம் உடைந்ததால் நிலை தடுமாறி, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ரன்வேயில் மோதி தீப்பிடித்தது.
இன்ஜின் வெடித்தது
விமானம் சிறிது தூரம் பைலட் கட்டுப்பாட்டை இழந்து படுவேகத்தில் ஓடியது. இருப்பினும், சில அடி தூரத்தில் சென்று விமானம் நின்றுவிட்டது. இதையடுத்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதன்பிறகு இன்ஜின் வெடித்து பெரும் நெருப்பு வெளிப்பட்டது. புகை மண்டலமாக அந்த இடம் காட்சியளித்தது.
காப்பாற்றிய வீரர்கள்
விமானம் விபத்துகுள்ளாகி ஒரு பகுதி தீ பிடித்தது. உடனடியாக தீயணப்பு படை வீரர்கள் தீயை அணைத்ததோடு மீட்பு பணியில் ஈடுபட்டு 282 பயணிகளை காப்பாற்றினர்.
உயிர் நீத்தார்
இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ராசல் அல் கைமாவை சேர்ந்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் உயிரழந்தார். பிறரை காப்பாற்றுவதற்காக உயிரை தியாகம் செய்த முகமது ஹசின் போற்றத்தக்கவர் என்று துபாய் சிவில் விமானத்துறை தெரிவித்துள்ளது.