டோஸ்ட் மாஸ்டர் இன்டர்நேஷனலின் தலைவராக துபாயைச் சேர்ந்தவர் தேர்வு
துபாய்: டோஸ்ட் மாஸ்டர் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவராக துபாயைச் சேர்ந்த முஹம்மது முராத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் துபாயைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி முஹம்மது முராத்(49) "டோஸ்ட் மாஸ்டர் இன்டர்நேஷனல்" என்ற அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் உலக அளவிலான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமீரகத்தைச் சேர்ந்த முதல் நபர் முராத் ஆவார்.
மலேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான பெருமன்றத்தில் தேரந்தெடுக்கப்பட்டுள்ள முராத் துபாய் திரும்பியதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
உலக அளவில் 126 நாடுகளில் 3 லட்சத்து 13 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த டோஸ்ட் மாஸ்டர் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்த அமீரகத்திற்கு பெருமை. இந்த பதவி எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொறுப்பாகும் என்றார்.
அவர் முதன் முதலில் 1996ம் ஆண்டில் துபாய் சேப்டரில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார். அவரது கடின உழைப்பால் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.