இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஐடியா கொடுத்து 'ஸ்டிங் ஆபரேஷனில்' சிக்கிய தமிழ் டாக்டர்!!
லண்டன்: இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஆலோசனை தெரிவித்த டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் 3 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த தி டெலிகிராப் ஏடு அண்மையில் இங்கிலாந்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரிப்பது தொடர்பான ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது.
இதற்காக கர்ப்பிணிகளை மருத்துவர்களிடம் அனுப்பி பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்ல வைத்து அதற்கு டாக்டர்கள் என்ன மாதிரியான பதிலை தெரிவிக்கிறார்கள் என்பதை ரகசியமாக பதிவு செய்தது.
இந்த ரகசிய ஆபரேஷனில் தமிழரான டாக்டர் பழனியப்பன் ராஜமோகனும் சிக்கியுள்ளார். அவர் தொடர்பான வீடியோ காட்சியில் பெண் ஒருவர் டாக்டர் பழனியப்பன் ராஜமோகனிடம் செல்கிறார்.
தாம் கர்ப்பமாக இருப்பதாகவும் 2வதும் பெண் குழந்தை என்பதால் அதை விரும்பவில்லை.. அதை அழித்துவிடலாம் என இருப்பதாகவும் கூறுகிறார். இது பெண் குழந்தை என்பதால்தான் கலைக்கிறீர்கள்தானே என மருத்துவர் கேட்கிறார்..
அந்த பெண்ணும் ஆமாம் என்கிறார்.... ஆனால் பெண் குழந்தை என்பதால் கருவைக் கலைப்பதாக ஆவணங்களில் எழுதாமல், நீங்கள் இளம்வயதிலேயே கர்ப்பம் தரித்ததால் கருவை கலைப்பதாக மாற்றி எழுதுகிறேன் என டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் கூறுகிறார்.
இதேபோல் பிரபா சிவராமன் என்ற இந்திய பெண் மருத்துவரிடம் ஒரு கர்ப்பிணி பெண் சென்று பெண் சிசு என்பதால் கருக்கலைப்பு செய்ய விரும்புவதாக கூறுகிறார்.. இதற்கு எந்த ஒரு ஆட்சேபமின்றி கருக்கலைப்பு செய்யலாம் என பிரபா சிவராமன் கூறுகிற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இங்கிலாந்து மருத்துவ கவுன்சில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் 3 மாதங்களுக்கு டாக்டர் பழனியப்பன் ராஜமோகன், மருத்துவராக பணியாற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.