தமிழகப் பிரச்னைகளுக்கான ஏப்ரல் 15-ல் லண்டனில் ஒன்றிணைந்து போராடும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள்!
தமிழகப் பிரச்னைகளுக்கான ஏப்ரல் 15 லண்டனில் இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடவுள்ளனர்.
லண்டன் : தமிழக வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கான லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக வரும் ஏப்ரல் 15ம் தேதி இங்கிலாந்து வாழ் தமிழர்கள் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் 50 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் மக்களை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் போராட்டங்களால், தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு இந்த போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து வாழ் தமிழர்கள் வருகிற ஏப்ரல் 15ம் தேதி இந்தியத் தூதரகம் முன்பு அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்திற்கு இது வரை லண்டன் தமிழ் மக்கள், தமிழர் ஒருமைப்பாடு இயக்கம், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழர் முன்னேற்ற கழகம், உலக தமிழ் அமைப்பு, லண்டன் தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறப்போரில் தங்களை இணைத்து ஆதரவை வழங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு தொடங்கி காவிரி, ஸ்டெர்லைட், மீத்தேன், கெயில், நியூட்ரினோ, சாகர் மாலா என தொடர்ந்து தமிழக வாழ்வாதராத்தை சிதைக்கும் திட்டங்களையும், இந்தி திணிப்பின் மூலம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் கண்டித்து இந்த அறபோராட்டத்தின் மூலமான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் தயாராகி வருகிறார்கள்.