”அகதிகள் வரவேற்கப்படுகின்றனர்” - அரசு கைவிட்டாலும் அன்புடன் வரவேற்கும் ஐரோப்பிய மக்கள்!
வியன்னா: ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் ஆப்ரிக்க மக்களைஅரசு ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர் அந்நாட்டு மக்கள்.
போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில் அகதிகளுக்கு ஆதரவாக நேற்று ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் சுமார் 20 ஆயிரம் மக்கள் பேரணி ஒன்றை நடத்தி அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளனர். இந்த பேரணியின் போது "அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள்" என்பது போன்ற வாசகங்களை பொது மக்கள் ஏந்தி சென்றனர்.
ஒரு வாரத்திற்கு முன்பாக ஆஸ்திரியாவின் தேசிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு லாரி நின்றுள்ளது. லாரியின் பின் கதவை திறந்து பார்த்தபோது மூச்சுத்திணறி இறந்துபோன அகதிகளின் சுமார் 71 உடல்கள் இருந்து. இந்த சம்பவம் ஐரோப்பா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜெர்மனியில் நடந்த ஒரு கால்பந்து போட்டியிலும் அகதிகளுக்கு ஆதரவாக மிகப்பெரிய பேனர்கள் காட்டப்பட்டன. அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்ற கோஷத்தால் மைதானம் அதிர்ந்தது. மேலும் சுமார் 220 அகதிகள் அந்த போட்டியை பார்க்கவும் அழைத்துவரப்பட்டனர். இதேபோல் நார்வே போன்ற பல்வேறு நாடுகளிலும் அகதிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.