முதுபெரும் ஈழத் தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ. ஆஸ்திரேலியாவில் காலமானார்!
சிட்னி: இலங்கையின் பிரபல எழுத்தாளரும் தமிழ் இடதுசாரி இலக்கியவாதியுமான எஸ்.பொ என்ற எஸ். பொன்னுத்துரை (82) ஆஸ்திரேலியாவில் காலமானார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் நல்லூரில் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர் எஸ். பொன்னுத்துரை. தமிழகத்தின் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்றார்.
இடதுசாரி இயக்க சிந்தனையாளரான எஸ்.பொ. சிறுகதைகள், கட்டுரைகள் என நூற்றுக்கணக்கான படைப்புகளைப் படைத்தவர். ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் முன்னர் நைஜீரியாவில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார் எஸ்.பொ. சென்னை மித்ரா பதிப்பகத்தின் வெளியீட்டாளரும் எஸ்.பொ.தான்.
எஸ்.பொ.வின் நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய "இனி ஒரு விதி செய்வோம்" என்ற நூல் வெளியாகி இருக்கிறது. 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட " வரலாற்றில் வாழ்தல்" என்ற எஸ்.பொவின் சுயசரிதையும் வெளியாகியுள்ளது.