அடி தூள்.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த எத்தியோப்பியா.. 35 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரங்களை நட்டு அந்நாட்டு மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
உலக நாடுகள் பருவநிலை குறித்து பேசி வரும் சூழலில், 2017-ம் ஆண்டில், இந்தியா 12 மணிநேரத்தில் 66 மில்லியன் மரக்கன்றுகளை 1.5 மில்லியன் தன்னார்வலர்களைக் கொண்டு நடவு செய்தது. தற்போது அந்தச் சாதனையைப் பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருக்கிறது எத்தியோப்பியா.
கிழக்கு ஆப்ரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2வது நாடாக எத்தியோப்பியா திகழ்கிறது. இதன் வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வரும் நிலையில், மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட எத்தியோப்பிய அரசு திட்டமிட்டுள்ளது.
#GreenLegacy in Wolayta Soddo#አረንጓዴአሻራ በወላይታ ሶዶ#PMOEthiopia pic.twitter.com/qnl9sj547j
— Office of the Prime Minister - Ethiopia (@PMEthiopia) July 29, 2019
வறுமைக்கு முக்கிய காரணம், இயற்கை நம்மை வஞ்சிப்பது தான் என எண்ணிய எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது, தனது தலைமையில் 'பசுமை மரபு' என்ற பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு 12 மணிநேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.
அரசு ஊழியர்களும் பங்கேற்கும் வகையில் நேற்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் நல்ல மழை பெய்யும், விவசாயம் செழிக்கும், வருமானம் கொழிக்கும் தண்ணீர்ப் பிரச்சனை தீரும். தூய்மையான காற்றால் வாழ்நாள் கூடும் எனப் பல நல்ல விஷயங்களை வரும் காலத்தில் அனுபவிக்கப் போகிறோம் என மகிழ்ச்சியில் உள்ளனர் அந்நாட்டு மக்கள்.
பருவ நிலை மாற்றத்தால் பூமியின் நிலப்பகுதி மிக அதிகப்படியான வெப்பம் அடைவதால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. மேலும், உலகில் பத்தில் ஒன்பது பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை . காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.