ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை ரத்து
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
லண்டன்: தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மனு. ஆனால் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டனைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எலேனர் சாப்ஸ்ரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய யூனியன் முன் வந்துள்ளது.
இதனிடையே ஹமாஸ் அமைப்பை தடைப் பட்டியலில் இருந்து நீக்க, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல் ரணில் விக்கிரமசிங்கேவின் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கூடாது என்று தெரிவித்து இருந்தது.
இதனை அடுத்து இலங்கை மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பு இருந்தாலும் கூட, தடைப் பட்டியலில் இருந்து இவ்விரு அமைப்புகளின் பெயர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றிக்கை விரைவில் வெளியாகிறது.
தடை நீக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முடக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் சொத்துகள், வங்கி வைப்பு தொகைகள் மீண்டும் கிடைக்கும்; விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும். இது இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.