பயங்கரவாத இயக்க பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்கியது ஐரோப்பிய ஒன்றிய கோர்ட்! #LTTE
ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் நீக்கப்பட்டுள்ளது.
லக்சம்பர்க்: பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கி தீர்ப்பளித்தது 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம்.
தமிழீழத் தனிநாடு கோரும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது 2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கீழ் நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு வழக்கு தொடர்ந்தது.
இந்த விசாரணையின் போது 2009-க்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை; வன்முறையற்ற வழிகளில்தான் புலிகள் போராட விரும்புகின்றனர்; விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாக வைத்து விடுதலைப் புலிகள் மீது தடை விதித்திருப்பது நியாயமே அல்ல.
2014-ல் கீழ் நீதிமன்றமும் நீக்கியது
இனப்படுகொலையை நிகழ்த்திய ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் போராட்டம் இருந்தது என விடுதலைப் புலிகளின் வழக்கறிஞரான நெதர்லாந்தைச் சேர்ந்த விக்டர் கோப் ஆஜராகி வாதாடியிருந்தார். இதனை ஏற்று 2014-ல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியது.
மேல்முறையீடு
இருப்பினும் மேல் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தேவையில்லை என்கிற நிலைமை இருந்தது. இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியமே மேல்முறையீடு செய்வதாக அறிவித்தது. இதை குதூகலத்துடன் இலங்கை அரசு வரவேற்றது.
ஆதாரமே இல்லை
இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் தாக்கல் செய்யவில்லை.
பட்டியலில் இருந்து நீக்கம்
ஆகையால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றமே புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது உலகத் தமிழர்களை பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.