சிஏஏவுக்கு எதிரான தீர்மானம்.. எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லைங்க.. விலகி கொண்டது ஐரோப்பிய யூனியன்
ஜெனிவா: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான ஆறு அரசியல் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு தீர்மானங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் விலகிக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 154 உறுப்பினர்களை கொண்டுள்ள எல் அண்ட் டி(சமதர்மவாதிகள், ஜனநாயக கட்சி கூட்டணி), 182 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய மக்கள் கட்சி, 66 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்த குழு, 41 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஐக்கிய இடதுசாரி குழுக்கள், 108 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய புதுப்பிப்பு குழு, 75 உறுப்பினர்களை கொண்ட கிரீன்ஸ் மற்றும் ஐரோப்பிய குழு ஆகிய ஆறு அரசியல் குழுக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான இந்த தீர்மானம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடக்கூடாது என்றும் கண்டித்துள்ளது.
தப்பா பயன்படுத்துவாங்க.. ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு கடிதம்
சிஏஏவுக்கு எதிரான தீர்மானம்
இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டதில் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் வெர்ஜினே பட்டு-ஹென்ரிக்சான் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
அரசியல் குழுக்களின் தீர்மானம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சில அரசியல் குழுக்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இது 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ முடிவு அல்ல" என்று தெரிவித்தார்.
வரைவு தீர்மானம் மட்டுமே
"அதன் வழக்கமான நடைமுறைகளின்படி, ஐரோப்பிய நாடாளுமன்றம் வரைவு தீர்மானங்களை வெளியிட்டது. இந்த அறிக்கைகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசியல் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வரைவுகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்வது அவசியம். இதை நான் உங்களுக்கு நினைவூட்ட காரணம், ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை " என்றார்.
15வது உச்சி மாநாடு
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடனான தனது 15 வது உச்சி மாநாட்டை 2020 மார்ச் 13 ஆம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடத்துகிறது, இந்தியாவுடனான கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், விதிகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு ஒழுங்கை கூட்டாக ஊக்குவிக்கவும் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பங்காளி என்றும் அதன் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்தார்
ஒரே கருத்து
முன்னதாக, இதே கருத்தை இந்தியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு பிரதிபலித்தது, "ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு சுயாதீனமான நிறுவனம், அதன் பணிகளை ஒழுங்கமைப்பதில் மற்றும் அதன் விவாதங்களில் இறையாண்மை கொண்டது. குறிப்பிடப்பட்ட தீர்மானம் (சிஏஏவுக்கு எதிரானது) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அரசியல் குழுக்களின் வரைவு தீர்மானம் மட்டுமே" என்று தெரிவித்தது.