சல்லுன்னு புகுந்து செல்பி கேட்ட ரசிகர்.. சற்றும் கோபிக்காமல் சிரித்தபடி போஸ் கொடுத்த ரொனால்டோ!
பாரிஸ்: யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின்போது திடீரென மைதானத்திறகுள் ஓடி வந்த ரசிகர் ஒருவர் போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் செல்பி எடுத்துக் கொண்டு வெற்றிப் புன்னகையுடன் வெளியேறினார். அவரிடம் முகத்தைக் காட்டாமல், சிரித்தபடி போஸ் கொடுத்தார் ரொனால்டோவும்.
மேலும் அவரை செல்பி எடுக்க அனுமதித்த ரொனால்டோ, பாதுகாப்பு வீரர்களையும் கூட தடுத்து நிறுத்தி ரசிகருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அசத்தினார்.
என்ன கொடுமை என்றால் நேற்று ஆஸ்திரியாவுடன் நடந்த போட்டியின்போது அட்டகாசமான பெனால்டி வாய்ப்பை கோலாக்கத் தவறிய பெரும் சோகத்தில் இருந்தார் ரொனால்டோ. இருப்பினும் ரசிகரிடம் அவர் கூலாக நடந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.
பாரிஸ் போட்டி
பாரீஸில் நடந்த போட்டியில் போர்ச்சுகல் அணியும், ஆஸ்திரியாவும் மோதின. கடும் பலப்பரீட்சை நடந்த நிலையில் இரு அணியும் கோல் போடவில்லை. இதனால் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
பெனால்டியை மிஸ் செய்த ரொனால்டோ
மேலும் ரொனால்டோவுக்கு ஒரு அருமையான, எளிதான பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவர் கோலாக்கத் தவறினார். இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார்.
ஊடுறுவிய ரசிகர்
இதனால் போர்ச்சுகல் ரசிகர்கள் ரொனால்டோ மீது அதிருப்தி அடைந்திருந்தனர். இந்த நிலையில்தான் திடீரென ஒரு போர்ச்சுகல் ரசிகர் மைதானத்திற்குள் ஊடுறுவி ஓடி வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த ரசிகர் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார்.
போஸ் கொடுத்த ரொனால்டோ
அந்த ரசிகரை அப்புறப்படுத்த ஓடி வந்த பாதுகாப்பாளர்களை தடுத்து நிறுத்திய ரொனால்டோ அந்த ரசிகருடன் செல்பி எடுக்க முன்வந்தார். சிரித்தபடி அவருக்குப் போஸும் கொடுத்தார். ரசிகரும் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டு நன்றி சொல்லி பின்னர் வெளியேறினார்.