புலம்பெயர் தமிழர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திய ஐரோப்பிய யூனியனின் அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நிம்மதியளித்துள்ளது.
லக்சம்பர்க்: இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க உத்தரவு அமைந்துள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்காலங்களிலும், அதற்குப் பிறகான காலகட்டத்திலும் பலர் அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் பிரதான பிரச்னை என்னவென்றால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக எந்த போராட்டத்தை கையில் எடுத்தாலும் அவர்கள் மீது விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது போராட்ட அமைப்பு தான், அது தீவிரவாத அமைப்பு அல்ல என்று சர்வதேச நீதிமன்றங்களில் புலம்பெயர்த் தமிழர்கள் வழக்கு தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். எனினும் சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று கூறி தடை விதித்ததால் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் போராட்டக் குரல் நசுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம் இன்று அளித்த இறுதித் தீர்ப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இனியாவது தங்களின் போராட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் செவிசாய்க்கும் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் ஐரோப்பிய நாடுகளைப் போலவே புற நாடுகளும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது.