ரயிலை மிஸ் பண்ண மாட்டோமே...கியூபாவை நோக்கி படையெடுக்கும் 'ஐரோப்பிய தேசங்கள்'
ஹவானா: அமெரிக்கா- கியூபா இடையேயான உறவு புதுப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐரோப்பிய தேசங்கள் கியூபாவில் முதலீடு செய்வதற்கான படையெடுப்பை தொடங்கிவிட்டன.
அமெரிக்கா- கியூபா இடையேயான பனிப்போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவும் கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன், டவ் கெமிக்கல், மைக்ரோசாப், கூகுள், டெல் என பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கியூபாவில் கால்பதிக்கும் பணிகளைத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து ரோம் நகருக்கு கடந்த மே மாதம் கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ வருகை தந்திருந்தார். அப்போது ஐரோப்பிய நாடுகள், கியூபாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் பின்னர் இத்தாலி, ஜெர்மன், ஸ்பெயின் என பல ஐரோப்பிய தேசங்கள் கியூபாவை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஸ்பெயினின் வர்த்தகத் துறை அமைச்சர் தலைமையில் 75 தொழில் நிறுவனங்கள்; இத்தாலியின் 140 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கியூபாவுக்கு செல்கின்றனர்.
இதேபோல் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ப்ராங் வால்டர் தலைமையில் 100பேர் அடங்கிய வர்த்தகக் குழுவும் கியூபா செல்கிறது. பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து என ஐரோப்பிய தேசங்கள் அனைத்தும் அடுத்தடுத்து கியூபாவுக்கு சென்று தொழில் முதலீட்டுக்கான அம்சங்களை ஆராய உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கியூபாவுக்கான தூதர் ஹெர்மன், இந்த ரயிலை நாங்கள் தவறவிட தயாராக இல்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.