அரசு ஓ.கே.சொன்ன பிறகும், 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ள தம்பதிகள் தயக்கம்! சங்கடத்தில் சீனா
பீஜிங்: சுமார் 35 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரேயொரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சீனா, இப்போது 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதியளித்துள்ளது. ஆயினும், இரு தலைமுறைகளாக, ஒரு குழந்தை கொள்கையிலேயே ஊறிப்போன சீன தலைமுறையினர் இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உலகிலேயே அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இதனால் அங்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. சீன நவீன பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டெங் ஜியோபிங் ஆட்சி காலத்தில் இந்த உத்தரவுபோடப்பட்டது.
இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த பெற்றோருக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சரியான செயல்படுத்தியதால், எதிர்பார்த்தபடியே, அந்த நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ந்து உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறியது.
முதியோர் இல்லமான நாடு
அதேநேரம், வேறு சில சிக்கல்களை அந்த நாடு சந்தித்தது. வயதானவர்கள் சீனாவில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. இளைஞர்கள் குறைந்துவிட்டதால், நாட்டில் உழைக்கும் சக்தி பெருமளவு குறைந்து வருகிறது.
21 கோடி முதியோர்
சீனாவில் தற்போது மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம்பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். அதாவது 21.2 கோடி மக்கள் முதியவர்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை தலா 1 கோடி என்ற அளவில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
தீவிர ஆலோசனை
இப்பிரச்சினை குறித்து, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 4 நாட்களாக தலைநகர் பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தி விவாதித்தது. இதில் சீன பொருளாதார வளர்ச்சி சரிவடையும் வாய்ப்பு பற்றி ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
2 குழந்தைகளுக்கு ஓ.கே
இதனையடுத்து, ஒரு குழந்தை கொள்கைக்கு முடிவு கட்ட முடிவு செய்யப்பட்டது. இனிமேல் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு அனைத்து அரசு சலுகைகளும் தரப்படும் என்று, நேற்று அறிவிக்கப்பட்டது.
கலாசாரம் மாறிவிட்டது
அரசு பச்சைக்கொடி காண்பித்த பிறகும்கூட, சீனர்கள் 2வது குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வமற்று உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதற்கு காரணம், 35 வருட காலமாக, அதாவது இரு தலைமுறை முழுவதுமே, ஒரு குழந்தை கலாசாரத்தில் மூழ்கிப்போனதுதான்.
பிரதர், சிஸ்டருன்னா என்ன..
சீனாவில், சகோதர, சகோதரி உறவே இல்லாமல்தான் ஒரு தலைமுறை வளர்ந்துள்ளது. கொள்ளு தாத்தா-பாட்டி, தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா பின்னர் ஒரு குழந்தை.. என்பதைப்போலத்தான் அங்கு குடும்ப முறை உள்ளது. இதனால் குடும்பத்தில் இளம் தலைமுறையினரைவிட வயதானவர்களே அதிகம் உள்ளனர்.
செலவு பயம்
மனதில் பதிந்துபோன இந்த கலாசாரம் மட்டுமின்றி, சீனர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முன்வராததற்கு மற்றொரு காரணமும் உள்ளதாம். இரு குழந்தைகளை பெற்றால் அவர்களை வளர்க்க அதிக செலவுபிடிக்கும், கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்காக அதிக செலவு செய்ய வேண்டிவருவதோடு, அதிக நேரத்தை செலவிட வேண்டிவரும். இதை கருத்தில் கொண்டு, கஞ்ச பிசினாரிகளாக வளர்க்கப்பட்ட சீனர்கள் 2வது குழந்தையை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்களாம்.
40 கோடி தடுப்பு
ஒரு கணக்கெடுப்பபடி, சீனாவில், கடந்த 35 வருட கால கெடுபிடி காரணமாக, 400 மில்லியன் (40 கோடி) குழந்தை பிறப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட பல பெண்கள், 2வதாக கரு உண்டானது தெரிந்த பிறகு கருக் கலைப்பு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஜாலி
சீன அரசாங்கத்தின் புதிய முடிவால், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியும், அது முடியாமல் இருந்த தம்பதிகளுக்கு இந்த உத்தரவு ஒரு வரப்பிரசாதமாகும். அவர்கள் இனி ஜாலியாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
சாம்பிள்
2013ம் ஆண்டில், குறைந்த அளவில் சலுகைகள் அளிக்கப்பட்டு, நகர்ப்புற தம்பதியினர் மட்டும் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நிறைய பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. 18 விழுக்காட்டு தம்பதிகள் 2வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 சதவீதம்பேர்தான் விண்ணப்பித்தனர். அதே மனநிலைதான் இப்போதும் நீடிப்பதாக சீன தகவல்கள் கூறுகின்றன.
விதிமுறை தளர்வு
2007ம் ஆண்டு மற்றும் 2013ம் ஆண்டுகளில் சீன அரசு தனது மக்கள் தொகை கொள்கையில் சிறிது தளர்வு செய்தது. அதாவது, முதலில் பெண் பிள்ளை பெற்றிருக்கும் கிராமங்களிலுள்ள தம்பதிகள் மட்டும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றது முதல் சீர்திருத்தம். இரண்டாவது சீர்திருத்தத்தின்போது, நகர்ப்புறங்களிலுள்ள தம்பதிகள் அவர்கள் குடும்பத்தில் ஒரே பிள்ளையாக இருந்தால், அத்தம்பதிகள் 2வது குழந்தை பெற்றுக்கொள்ள வழி செய்தது.