எகிப்து மன்னனின் "ஆவி" வாசம் புரியும் பங்களாவை தைரியமாக வாங்கிய கால்பந்து வீரர்!
ரோம்: எகிப்து மன்னனான துட்டன்காமுன் கல்லறை குறித்து ஆராய்ந்து பின்னர் மரணமடைந்த இத்தாலியைச் சேர்ந்த கார்னர்வோன் வசித்து வந்த பங்களாவை வாங்கியுள்ளார் கால்பந்து வீரர் சாமுவேல் எடோ. இதில் விசேஷம் என்னவென்றால் அந்த பங்களாவில் துட்டன்காமுனின் ஆவி வாசம் புரிந்து வருவதாக கூறப்படுவதுதான். இருந்தாலும் தைரியமாக பங்களாவை வாங்கி விட்டார் எடோ.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் மன்னராக இருந்தவர் துட்டன்காமுன். இவரது கல்லறையை 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி கண்டுபிடித்து திறந்து பார்த்தனர்.
எகிப்தின் நைல் நதி அருகில் இருக்கும் தீப்ஸ் பகுதியில் 3000 ஆண்டுகளாக, உலகின் கண்களில் இருந்து மறைந்து கிடந்த துட்டன்காமுனின் கல்லறையை, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹாவர்டு கார்ட்டர், அவரது நண்பர் லார்டு கார்னர்வோன் ஆகியோர் திறந்தனர்.
கல்லறையின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின், கடைசிப் பெட்டியில், மன்னர் துட்டன்காமுன் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தார். 18 ஆவது வயதில் மர்மமான முறையில் இறந்த மன்னர் அவர்.
அவரது இறப்புக்கான காரணம் பற்றி இன்று வரை ஆய்வுகள் தொடர்கின்றன. உடல் நலம் குன்றி இறந்ததாக ஒரு தகவல் உள்ளது. குத்திக் கொலை செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் உள்ளது. கால் உடைந்து அந்தப் புண் புரையோடி அதனால் இறந்தார் என்று ஒரு தகவல் உள்ளது. இதுவரை உருப்படியான உறுதியான தகவல் இல்லை.
இந்தச் சம்பவத்தை வைத்து புனையப்பட்ட கதைகள் ஏராளம். தனது கல்லறையைத் திறப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று துட்டன்காமுனின் கல்லறையில் எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கல்லறையைத் திறந்து 6 வாரங்களுக்குப் பிறகு, கொசுக்கடியால் ஏற்பட்ட தொற்று நோயால் கெய்ரோ நகரில் கார்னர்வோன் மரணமடைந்தார். இதேபோல், அதே ஆண்டில் அந்தக் கல்லறையைப் பார்வையிட்ட ஜார்ஜ் ஜே கவுல்டு என்பவர் சில மாதங்களில் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார். துட்டன்காமுனின் உடலை எக்ஸ்-ரே மூலம் ஆய்வுசெய்த சர் ஆர்ச்சிபால் டக்ளஸ் அடுத்த ஆண்டு மர்ம நோயால் இறந்தார்.
அதே போல இந்தப் பணியில் ஈடுபட்ட 58 பேரில் 8 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அதற்கு மன்னரின் ஆவி தான் காரணம் என்று கூறப்பட்டது. இப்படிப் பலர் மர்மமாக உயிரிழந்தது பலரின் கற்பனையைப் பயங்கரமாகத் தூண்டிவிட்டது.
மன்னர் துட்டன்காமுன் கல்லறையைத் தோண்டிய கார்னர்வோனுக்குச் சொந்தமாக இத்தாலியில் பிரமாண்டமான பங்களா இருந்தது. மன்னர் துட்டன்காமுன் ஆவி பயம் காரணமாக இங்கு யாரும் குடி வராமல் இருந்தார்கள். ஆனால் இத்தாலி கால்பந்து வீரர் சாமுவேல் எடோ, அதைப் பொருட்படுத்தாமல் ரூபாய் 178 கோடிக்கு அந்த பங்களாவை வாங்கி குடியேறிவிட்டார்.
காமரூனில் பிறந்தவர் எடோ. செல்சியா அணிக்காக ஆடிவந்தவர் இவர். கடலோரத்தில் அமைந்துள்ள இந்த பங்களாவை என்ன செய்யப் போகிறார் எடோ என்பது தெரியவில்லை. ஆனால் இதை மராமத்து செய்யவே 20 மில்லியன் பவுண்டு செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.