புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்- முன்னாள் காதலி உட்பட 3 பேரைச் சுட்டுக் கொன்று காதலர் தற்கொலை
பாரீஸ் : பிரான்சில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது முன்னாள் காதலி உட்பட மூன்று பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் வடக்குப் பகுதியில் கலைஸ் துறைமுகத்திற்கு அருகே உள்ள அர்ரஸ் நகரில் வீடொன்றில் இன்று அதிகாலை புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகில் காரில் கொலையாளி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டறிந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் குற்றவாளியின் முன்னாள் காதலி என்பதும், அவரது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமலேயே, அந்நபர் இத்தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.