ஆர்லான்டோ துப்பாக்கிச்சூட்டின்போது 70 பேரை காப்பாற்றிய இந்திய வம்சாவளி ஹீரோ இம்ரான் யூசுப்
ஆர்லான்டோ: ஆர்லான்டோ கிளப்பில் உமர் மாட்டீன் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது 70 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் முன்னாள் ராணுவ வீரர் இம்ரான் யூசுப்.
அமெரிக்காவின் ஆர்லான்டோ நகரில் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர் கிளப்பு ஒன்றுக்குள் புகுந்த உமர் மாட்டீன் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போது அதே கிளப்பில் பவுன்சராக உள்ள முன்னாள் ராணுவ வீரரான இம்ரான் யூசுப் தனது உயிரை பொருட்படுத்தாது துணிந்து பின் வாசல் கதவை திறந்துவிட்டு 70 பேரை காப்பாற்றியுள்ளார்.
இம்ரான் தான் அமெரிக்க மக்களின் தற்போதைய ஹீரோ.
இம்ரான்
இம்ரான் கதவை திறந்து 70 பேர் தப்பியோட உதவியுள்ளார். கடந்த மாதம் ராணுவத்தில் இருந்து வெளியேறிய இம்ரான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பாட்டியும், தாயும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.
இந்திய வம்சாவளி
இம்ரானின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து கிளம்பி தென்னமெரிக்க நாடான கயானாவில் குடியேறியுள்ளனர். 70 பேரின் உயிரை காத்த இம்ரானை அமெரிக்கர்கள் ஹீரோவாக கொண்டாடி வருகிறார்கள்.
அழுகை
துப்பாக்கிச்சூடு குறித்து இம்ரான் கூறுகையில், நான் இன்னும் பலரின் உயிரை காப்பாற்றியிருந்திருக்கலாமே என வருத்தமாக உள்ளது. பலர் இறந்துவிட்டனர் என்று கூறி அழுதார்.
ஆப்கானிஸ்தான்
17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்ததும் இம்ரான் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பணியாற்றியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.