ரூ.8.46 கோடி லஞ்சம் பெற்ற ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச்
நியூயார்க்: ஐ.நா. சபை முன்னாள் தலைவர் ஜான் ஆஷ், சீன தொழிலதிபர் ஒருவரிடம் 13 லட்சம் அமெரிக்க டாலர் (8.46 கோடி) லஞ்சம் வாங்கியுள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஆஷ் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து 2014 வரை ஐ.நா. பொதுச் சபை தலைவராக ஜான் ஆஷ் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஆன்டிகுவா மற்றும் பார்படாவின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதியாக இருந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு முதலாகவே ஐ.நா.வில் சில காரியங்களைச் சாதிக்க தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்த ஐ.நா. அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து சில பணிகளை தொழிலதிபர்களுக்குச் சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார் என்பது ஆஷ். மீதான குற்றச்சாட்டு.
பல கோடி லஞ்சம்
மேலும், ஐ.நா.சபை தலைவராக இருந்தபோது சீனாவின் மகாவு பகுதியில் ஐ.நா. நிதியுதவியில் கருத்தரங்கு மையம் கட்டுவதற்கு, என்ஜி லாப் செங் என்னும் தொழிலதி பருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவரிடமிருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்றுள்ளார் ஆஷ். இதுபோன்று ஆஷ் சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் லஞ்சமாக வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டில் ஆஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
5 பேர் கைது
அமெரிக்க அட்டர்னி பிரீத் பராரா அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியதைத் தொடர்ந்து ஆஷ் மற்றும் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா.வுக்கான டொமினிக் குடியரசு துணை தூதர் பிரான்சி லோரன்ஸே, என்ஜி லாப் செங், ஜெஃப் யின், சுவேய் யான், ஹெய்தி ஹாங் பியாவோ ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பான் கி - மூன் அதிர்ச்சி
ஐ.நா. அமைப்பில் தலைவராக பதவி வகித்த ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.
பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறும்போது, "ஆஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்த போது, மூன் அதிர்ச்சியடைந்தார். மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு தருவோம்
இந்த செயல் ஐ.நா.வின் இறையாண்மையின் மையத்தையை அசைத்துவிட்டது. அவர் கைது செய்யப்பட்டது ஊடகங்கள் வாயிலாகத்தான் எங்களுக்கும் தெரியும். அமெரிக்க அதிகாரிகள் இதுதொடர்பாக முன்கூட்டி எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டால் உரிய வகையில் ஒத்துழைப்பு அளிப்போம்" என்றும் கூறியுள்ளார்.