யு.ஏ.இ: 2 புற்றுநோயாளி குழந்தைகளுக்காக துபாய் ஜிங்கிள்ஸ் காரோல்
துபாய்: ஆமீரகத்தில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரத்த புற்றுநோயால் அவதிப்படும் இரண்டு குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்ட துபாயில் கிறிஸ்துமஸ் காரோல் செல்கின்றனர்.
அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் சேர்ந்து அமைத்துள்ள குழு துபாய் ஜிங்கிள்ஸ். இந்த குழு ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காரோல் செல்வது வழக்கம். அதாவது கிறிஸ்துவ பாடல்களை பாடிக் கொண்டு வீடுகளுக்கு சென்று வாழ்த்துவார்கள். இந்த ஆண்டு அந்த குழு ரத்த புற்று நோயால் அவதிப்படும் இரண்டு குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்ட காரோல் செல்கிறது.
இது குறித்து துபாய் ஜிங்கிள்ஸை சேர்ந்த ராஜீவ் டேவிட் கூறுகையில்,
நாங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் என 36 பேர் இந்த குழுவில் உள்ளோம். நாங்கள் கிறிஸ்துமஸ் காரோல் பாடல் பாடுவதில் விருப்பம் உள்ளவர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக காரோல் செல்வோம். உடல் பாகங்கள் செயல் இழந்த சுனில் பிண்டோ என்பவருக்காக கடந்த ஆண்டு காரோல் சென்று ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் நிதி திரட்டி அவருக்கு அளித்தோம்.
இந்த ஆண்டு துபாய் மருத்துவமனையில் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தவ்ஜான் உஷுரோவ்(4) மற்றும் அம்மார் இப்ராஹிம் அலி(3) ஆகியோரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுகிறோம்.
அந்த குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு தலா ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. சிகிச்சை மூலம் அவர்கள் குணமடைய 95 சதவீத வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம்.
நாங்கள் பாட்டு பாட வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்போரின் வீடுகளுக்கு மட்டுமே நாங்கள் செல்கிறோம். நாங்கள் வார இறுதி நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காரோல் செல்வோம். உஷுரோவ் மற்றும் அலிக்காக ஒரு வார இறுதியில் மட்டும் ரூ.5 லட்சம் நிதி திரட்டியுள்ளோம் என்றார்.