அமெரிக்காவில் விண்ணில் பறந்த ராக்கெட் திடீரென வெடித்து சிதறியது
புளோரிடா: விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க தனியார் ராக்கெட் 'ஸ்பேஸ்எக்ஸ் - பால்கன் 9' திடீரென நடுவானில் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வுக்காக பூமியிலிருந்து 450 கி.மீ., உயரத்திற்கு மேல் ஐ.எஸ்.எஸ்., என்ற பெயரில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை அமைத்து வருகின்றன. அந்த ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்கள், கருவிகளை ஏற்றிச் செல்லும் பணியில் தனியார் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ஸபேஸ் எக்ஸ் - பால்கன் 9 என்ற ராக்கெட் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தை அடுத்து பல மைல் தொலைவுக்கு கரும்புகையாக காணப்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. விபத்தினால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் குறித்து தகவலும் இன்னும் வெளியாகவில்லை. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.