இந்திய, ஜெர்மனி தூதரகங்களுக்குக் குறி.. காபூலில் குண்டுவெடிப்பு.. 50க்கும் மேற்பட்டோர் பலி!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியர்கள் யாரும் காயமடையவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளர்.
காபூலின் வாசிர் அக்பர் கான் பகுதியில் இந்தியத் தூதரகம் உள்ளது. இப்பகுதி முழுவதும் வெளிநாட்டு தூதரகங்கள்தான் பெரும்பாலும் உள்ளன. இந்தியா, ஜெர்மனி நாட்டு தூதரகங்கள் அடுத்தடுத்து உள்ளன.
இதில் இந்திய தூதரகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில், ஜெர்மனி நாட்டு தூதரக வாயிலுக்கு அருகே இன்று காலை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேசமயம் இந்திய தூதரக அலுவலகத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஜன்னல், கண்ணாடிகள் உடைந்துள்ளன. யாரும் காயமடையவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி போயுள்ளார். இந்த நிலையில் இந்திய, ஜெர்மனி தூதரகங்களுக்கு அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளதால், இது இரு நாடுகளின் தூதரகங்களைக் குறி வைத்து நடந்த தாக்குதலாக தெரிகிறது. இந்த இடத்திற்கு அருகில்தான் ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையும் உள்ளது.
#KabulExplosion - A plume of smoke rises over #Kabul city after a massive explosion rocked the city early Wednesday #Afghanistan pic.twitter.com/knlGxEHbuk
— TOLOnews (@TOLOnews) May 31, 2017
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரவாதிகளின் தொடர் இலக்காக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு குறித்து சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட டிவீட்டில், கடவுள் அருளால் இந்திய தூதரக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஆனால் மே 3ம் தேதி நடந்த நேட்டோ வாகன அணிவகுப்பு மீதான தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.