நியூயார்க் பள்ளியில் பயங்கர சத்தத்தோடு காஸ் தீ விபத்து.. வெடிகுண்டு என மக்கள் அச்சம்
நியூயார்க்: அமெரிக்க வர்த்தக நகரான நியூயார்க்கிலுள்ள ஒரு பள்ளியில் காஸ் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நியூயார்க், மார்பிள்ஹில் பகுதியிலுள்ள புரோன்க்ஸ் உயர்நிலைப் பள்ளியின் ஆறாவது மாடியில் நேற்று இரவு வரை கட்டுமானப் பணிகள் நடந்துவந்துள்ளன. அப்போது காஸ் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் தொழிலாளர்கள் சிலர் பணியாற்றியதாக தெரிகிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக, காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்தோடு விபத்து ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தில் வசிப்போர் வெடிகுண்டு வெடித்துள்ளது என்றும், பூகம்பம் என்றும் அச்சப்பட்டு தெருவுக்கு ஓடியுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, காயமடைந்த 3 தொழிலாளர்களை மருத்துவமனை கொண்டு சென்றனர். அதில் ஒரு தொழிலாளியின் நிலைமை மோசமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.